வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (14:59 IST)

நிறைமாத கர்ப்பிணியின் கணவர் தலை துண்டிப்பு: 4 பேர் வெறிச்செயல்

நிறைமாத கர்ப்பிணியின் கணவர் தலை துண்டிப்பு: 4 பேர் வெறிச்செயல்

நெல்லையில் 4 பேர் கொண்ட கும்பல் நிறைமாத கர்ப்பிணியின் கணவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர்.


 


நெல்லை டவுன் பாட்டப்பத்தை சேர்ந்த சலவை தொழிலாளி மாரியப்பனுக்கும் (24) அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக மாரியப்பன் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. நேற்று இந்த வழக்கில் மாரியப்பன் நெல்லை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய அவர் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவரை காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மாரியப்பனை பல இடங்களில் தேடினர். இரவு முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள வாய்க்கால் கரையோரம் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக டவுன் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டது மாரியப்பன் என தெரியவந்தது.

இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியுள்ளது. இதை பார்த்த மாரியப்பன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க கால்வாய் கரை ஓரம் ஓடினார். பின்னால் துரத்தி சென்ற கும்பல் அவரது கை, கால்களில் அரிவாளால் வெட்டியது. பின்னர் அவரது தலையை துண்டித்து எடுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். துண்டிக்கப்பட்ட தலையை கும்பல் அங்குள்ள கால்வாய்க்குள் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாரியப்பன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சங்கர், மனைவி லட்சுமி ஆகியோர் மாரியப்பன் உடலை பார்த்து கதறி அழுதனர். கொலை செய்யப்பட்ட மாரியப்பனின் மனைவி லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று காலை வளைகாப்பு நடக்க இருந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரை தேடி வருகின்றனர்.