பொங்கலுக்கு போனவங்க திரும்பி வந்துட்டாங்க.. சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடி..!
செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் இன்று காலை முதல் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு, சென்னை நோக்கி திரும்பும் மக்களின் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இந்த நெரிசலுக்கு முதன்மை காரணமாகும். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் மகேந்திரா சிட்டி சந்திப்பை கடக்க முயல்வதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
நேற்று இரவு முதலே வாகன போக்குவரத்து சீராக இருந்த நிலையில், இன்று காலை அலுவலகம் மற்றும் பணிகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் தீவிரமடைந்தது. குறிப்பாக, சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் மகேந்திரா சிட்டி பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நீண்ட தூரப் பயணத்தில் ஏற்கனவே சோர்வடைந்த பயணிகள், இந்த நெரிசலில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகினர்.
நெரிசலை கட்டுப்படுத்தக் கூடுதல் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாகனங்களை சீரான இடைவெளியில் விடுவதற்கும், மாற்று பாதைகளை பயன்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Edited by Siva