வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (12:02 IST)

விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து மனுகொடுத்த தாய்-மகள்: பரிதாபமாக உயிரிழப்பு

திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு, விஷம் குடித்துவிட்டு வந்து மனு கொடுத்த தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அம்மாபட்டி அருகே உள்ள கொட்டப்பட்டியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய வனஜா. இவருடைய கணவர் பாண்டியன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
 
இவர்களுடைய மகள் 13 வயமுடைய பிரவீனா 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். பிரவீனாவை வனஜாவின் மாமனாரும், மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
 
இது குறித்து மனு கொடுக்க தாய், மகள் 2 பேரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் கூடுதல் காவல் துறை சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 
அப்போது, வனஜாவும், பிரவீனாவும் தாங்கள் ஏற்கனவே விஷம் குடித்துவிட்டு வந்ததாக கூறினர். இதனால், அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
பின்னர், அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே வனஜாவும், அவருடைய மகள் பிரவீனாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
வனஜா, காவல் துறை அதிகாரியிடம் கொடுத்திருந்த புகார் மனுவில், “என்னுடைய கணவர் பெயரில் 3½ ஏக்கர் நிலம் உள்ளது. அவர் இறந்துவிட்டதால், அந்த நிலத்தை எங்களை பயன்படுத்த விடாமல் என்னுடைய மாமனார் மற்றும் மாமியார் அபகரித்துவிட்டனர்.
 
மேலும், என்னையும், எனது மகளையும் அவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒட்டன்சத்திரம் காவல் துறை துணை சூப்பிரண்டு மற்றும் கன்னிவாடி காவல் துறையினருக்கு கூடுதல் காவல் துறை சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.