வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (01:45 IST)

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நிலைப்பாடு என்ன? தயக்கம் காட்டும் பாமக

வரும் 2016ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலின் போது பாமக தனித்தே போட்டியிடும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி குறித்து உறுதியான முடிவை அறிவிக்கவில்லை.
 
சென்னை, மதுரவாயலில் பாமக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக முதலமைச்சர் வேட்பாளருமான அன்புமணி கலந்து கொண்டு பேசினார்.
 
அவர் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிகமுகவை மக்கள் வெறுத்து வருகின்றனர். பாமகவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், நம்ப பெரிய அய்யா தான். எப்படி என்றால், அவர்தான், தமிழகத்தில் மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று இரவு பகல் பாராமல் போராடி வருகின்றார். இப்படி ஒரு நல்ல தலைவர் உலகத்தில் எங்காவது கிடைப்பாரா? நமக்கு கிடைத்துள்ளார். அதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் பாமக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். ஆனால், வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று பேசினார்.
 
தமிழகத்தில் 2016 ல் தனித்து போட்டியிடும் என கூறும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக அறிவிப்பதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
 
ஆனால், இடைத் தேர்தலில் பாமக எப்போதும் போட்டியிடாது. அது தேவையில்லாத ஒன்று. மக்கள் வரிப்பணம் தான் வீண். ஏற்கனவே, அந்த தொகுதியில் வென்ற கட்சிக்கு, அந்த தொகுதியை கொடுத்துவிடலாம் என்பது பாமக தலைமையின் கருத்தாக உள்ளது.