வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (05:57 IST)

தமிழகத்தில் கடைசி சொட்டுச் சாராயம் உள்ள வரை பாமக போராடும்: அன்புமணி உறுதி

தமிழகத்தில் கடைசி சொட்டுச் சாராயம் உள்ள வரை பாமக போராடும் என்று பாமக இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி கருத்துத் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக இளைஞரணி மாநில தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்று பாமக தொடங்கியதில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகிறது. மேலும், மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடுகள் என்று நடத்தியுள்ளோம்.
 
ஆனால், மற்ற கட்சிகளுக்கு இன்று தான் மதுவிலக்குக் குறித்துக் கவலை வந்துள்ளது. அதனால்தான், இன்று அத்தனை கட்சிகளும் மதுவை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். இதில், திமுக கடைசியாக வந்து இணைந்து கொண்டது. மதுவை ஓழிப்போம் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறுகிறார். கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது எல்லாம் ஏன் மதுவிலக்கை அவர்கள் கொண்டு வரவில்லை?  யார் அவர்களைத் தடுத்தார்கள்?
 
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று பாமக போராடி வெற்றி பெற்று 600 மதுக்கடைகளை அகற்றியுள்ளது. மீதம் உள்ள 1500 கடைகளையும் அகற்ற வழக்குத் தொடந்துள்ளோம். அதிலும் வெற்றி பெறுவோம்.
 
ஆனால், ஒரு அரசியல் கட்சி தலைவர் இளைஞர்களையும், மக்களையும் தூண்டிவிட்டு டாஸ்மாக் கடைகளை உடைப்பது முறையல்ல. நாங்கள் தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகிறோம். தமிழகத்தில் கடைசிச் சொட்டுச் சாராயம் உள்ள வரை பாமக போராடும் என்றார்.