கார்த்திக் சிதம்பரம் எம்பி அலுவலகத்தில் குண்டுவீச்சு.. திமுக அரசுக்கு அன்புமணி, செல்வப்பெருந்தகை கண்டனம்..
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் காரைக்குடி அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள மற்ற கட்டடங்களில் உள்ள காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "கூட்டணி கட்சி எம்பி அலுவலகத்திற்கே பாதுகாப்பு வழங்க திமுக அரசு தவறிவிட்டது" என விமர்சித்துள்ளார்.
காரைக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Edited by Siva