1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (13:54 IST)

புதிய கட்சி தொடங்குவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு: 'எங்கிருந்தாலும் வாழ்க' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸ் எனும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள், வெளியேறித் தான் தீருவேன் என்று சொன்னால், அண்ணா சொல்வதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.
 
ஜி.கே. வாசன் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதே நேரத்தில், சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய இளங்கோவன், காங்கிரஸ் என்பது ஒரு கூட்டுக் குடும்பம். அந்த குடும்பத்தில் இருந்து, வீட்டில் இருந்து வெளியேறிவிடாதீர்கள் என்று வாசனைக் கேட்டுக் கொண்டார்.
 
மேலும் அவர் பேசுகையில், நீங்கள் கட்சியில் இருந்து விலகினால் குடும்பம் வருத்தப்படுமே தவிர நொடிந்து போய்விடாது.
 
காங்கிரசில் இருக்கும் நான்கு பேர் சொல்வதைத் தான் நீங்கள் கேட்பீர்கள் என்றால், காங்கிரஸ் கட்சியின் நான்கு லட்சம் தொண்டர்கள் சொல்வதைக் கேட்காமல் கட்சியில் இருந்து வெளியேறினால் அதற்காக வருத்தம் அடைகிறேன்.
 
நீங்கள் தனிக்கட்சி தொடங்கியே ஆவேன், கட்சியில் இருந்து வெளியேறித் தான் தீருவேன் என்று சொன்னால், பிறகு அண்ணா சொல்வதைப் போல எங்கிருந்தாலும் வாழ்க என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும் என்று கூறினார்.

புதிய இயக்கத்தைத் தொடங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜி.கே. வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.