விஜய் - த்ரிஷா குறித்து நயினாரின் சர்ச்சை கருத்து: அரசியல் தலைவர்கள் கண்டனம்..!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்; ஒரு குடும்பஸ்தனாக இருந்து அரசியல் செய்ய வேண்டும்" என்று தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தார். இக்கருத்து நாகரீகமற்றது என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, "ஒரு பண்பாளரான நயினார் நாகேந்திரன் எப்படி இப்படி பேசினார் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
இதேபோல், விசிக தலைவர் திருமாவளவன் இக்கருத்து ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "நயினார் பேச்சு கண்டனத்திற்குரியது; விஜய் பற்றி விமர்சிக்க அரசியலில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன" என்று சாடியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
Edited by Siva