1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2016 (14:43 IST)

ஆள் மாற்றி வேறொருவரை கொலை செய்த நபர் : திருப்பூரில் பயங்கரம்

ஒருவரை கொலை செய்ய வந்து, அவருக்கு பதிலாக இன்னொருவரை கொலை செய்த சம்பவம் திருப்பூர் ஜவுளிக்கடை ஒன்றில் நடந்துள்ளது.


 

 
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் சந்தோஷ்குமார் மற்றும் சண்முகபிரியன் ஆகிய இருவரும் நண்பர்கள். அவர்கள் இருவரும், ஒன்றாக சேர்ந்து அதே பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர்.
 
நேற்று மதியம் 12 மணிக்கு அவர்களின் கடைக்கு, பாபு என்ற ஒருவர் துணிகள் வாங்குவதற்கு வந்துள்ளார். கடையில் இருந்த சந்தோஷ்குமார், அவருக்கு துணிகளை காட்டிக் கொண்டிருந்தார். அப்போது சண்முகப்பிரியன் கழிப்பறைக்கு சென்றிருந்தார்.
 
அப்போது, அந்த கடைக்கு ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். உள்ளே நுழைந்த அவர்  ‘இது சந்தோஷின் கடைதானே’ என்று கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ்குமாரும் ‘ஆமாம்’ என்று கூறியுள்ளார்.
 
உடனே அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சந்தோஷ்குமாரை குத்தப் பாய்ந்துள்ளார். அதை தடுத்த போது, சந்தோஷ்குமாரின் இரண்டு கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. அப்போது கடைக்கு வந்திருந்த பாபு, அந்த ஆசாமியை தடுத்துள்ளார். 
 
அதையடுத்து அந்த நபர், பாபுவின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து பாபு அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதற்குள் சத்தம் கேட்டு சண்முகப்பிரியன் ஓடி வந்துள்ளார். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிள் ஏறி தப்பிவிட்டான்.
 
பாபு அங்கேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த சந்தோஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
போலீசாரின் விசாரணையில், சந்தோஷ்குமாரையும், சண்முகப்பிரியனையும் கொலை செய்யும் நோக்கத்தில் வந்த நபர், கடையிலிருந்த பாபுவை சண்முகப்பிரியன் என்று நினைத்து கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
 
போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகிறார்கள்.