70 ஐபிஎஸ் அதிகாரிகள்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள்.. ஒரே நாளில் இடமாற்றம்.. என்ன காரணம்?
தமிழகத்தில் நிர்வாக ரீதியான அதிரடி மாற்றமாக, 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பில் பல உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகப் பணியாற்றி வந்த டேவிட்சன் தேவசீர்வாதம் உட்பட மூன்று பேருக்கு டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளராக இருந்த அதுல்ய மிஸ்ரா இன்றுடன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, அந்த பொறுப்பிற்கு சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரதா சாகு இதுவரை கவனித்து வந்த கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் பதவிக்கு கே.சு.பழனிசாமி மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக கிரண் குராலாவும், ஆவண காப்பக ஆணையராக சு.மலர்விழியும் பொறுப்பேற்க உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த கோபால சுந்தரராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் தலைவராக நியமிக்கப்பட, பனோத் ம்ருகேந்தர் லால் புதிய டிஎன்பிஎஸ்சி செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
காவல்துறையை பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Edited by Siva