1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (11:40 IST)

குவிந்த கோரிக்கைகள் ; பணிந்த மஹிந்திரா : மாரியப்பனுக்கு ஜீப், ரூ.10 லட்சம் பரிசு

குவிந்த கோரிக்கைகள் ; பணிந்த மஹிந்திரா : மாரியப்பனுக்கு ஜீப், ரூ.10 லட்சம் பரிசு

பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மஹிந்திரா நிர்வாகம் பரிசு பொருளும், தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
ரியோ பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார் மாரியப்பன் தங்கவேலு.
 
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இதற்கு முன்பு பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 1.74 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. ஆனால், மாரியப்பன் 1.89 மீட்டர் தாண்டி, புதிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
 
அவருக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ரூ.75 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு அறிவித்துள்ளது. நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தனது பங்களிப்பாக ரூ.50 ஆயிரம் பரிசு அறிவித்திருக்கிறார்.
 
ஒலிம்பிக் போட்டியில் சாக்‌ஷி மாலிக் மற்றும் பி.வி. சிந்து ஆகியோருக்கு மஹிந்திரா நிர்வாகம் காரை பரிசாக அளித்தது. எனவே, அதுபோல் ஏன் மாரியப்பனுக்கு கொடுக்கவில்லை என்று மஹிந்திராவின் டிவிட்டர் பக்கத்தில் ஏராளமானோர் கேள்வி எழுப்பினர்.
 
அதற்காக தனி ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான டிவிட்கள் தட்டப்பட்டன. அவர்களின் கோரிக்கையை ஏற்ற மஹிந்திரா நிறுவனம், மாரியப்பனுக்கும் ஒரு ஜீப்பை பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
 
அதுமட்டுமின்றி, மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10 லட்சத்தை மாரியப்பனுக்கு கொடுப்பதாய் அறிவித்துள்ளார் .