மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகை கிடையாது: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளை வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவம் என்பவர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின், தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஒரு இந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது அவர் முஸ்லிமாக மட்டுமே மாறுகிறார் என்றும், அவரது பழைய ஜாதி அடையாளம் முற்றிலும் அழிந்துவிடுகிறது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவர் தனது விருப்பப்படி இஸ்லாம் மதத்திற்கு மாற முடியுமே தவிர, அங்கு மீண்டும் ஜாதி போன்ற சமூக பிரிவுகளுக்குள் நுழைய முடியாது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையில், அவர்களை 'பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்' என வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டப்படி செல்லாது எனக்கூறி அதனை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மத மாற்றத்திற்கு பிறகும் பழைய ஜாதி சலுகைகளை தொடர முடியாது என்று வந்துள்ள இந்தத் தீர்ப்பு, தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Edited by Siva
