வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2017 (13:38 IST)

அதிரடி திருப்பம் - ஓ.பி.எஸ்-ற்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு..

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
நேற்று முன்தினம் இரவு, சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கொடுத்த பேட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மோதல்தான் தற்போது தமிழக அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக வைத்துள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதாக சசிகலா தரப்பு கூறி வந்தது. ஆனால், அதிலிருந்து 5 பேர் ஏற்கனவே ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர்.   
 
சட்டமன்றத்தில் தன்னுடைய பலத்தை நிரூப்பேன் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, சசிகலா தலைமையில் அதிருப்தியில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்பது ஓ.பி.எஸ்-ஸின் நம்பிக்கை..
 
இந்நிலையில் அதிரடி திருப்பமாக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ்-ஐ அவரது வீட்டிற்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எந்த வித நிர்பந்தமும் இல்லாமல் நான் ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தருகிறேன். ஏனெனில், ரவுடிகளின் கூடாரமாக அதிமுக மாறிவிடக் கூடாது என கருதுகிறேன். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம்  காக்கப்பட வேண்டும்” என அவர் கூறினார்.
 
அதிமுகவின் அவைத்தலைவரே ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளது சசிகலாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.