1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (16:11 IST)

திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியின் ஆபாசப் படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய மாணவன்: மாணவி தற்கொலை முயற்சி

தர்மபுரியில் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலியின் ஆபாச படங்களை நண்பர்களின் செல்போன்களுக்கு அனுப்பிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி அறிந்த அவரது காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:–
 
தர்மபுரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்து வந்த மதுரையை சேர்ந்த தீபக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
 
காதல்ஜோடி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததை தீபக் தனது செல்போனில் படம் பிடித்து வைத்தார். இந்த நிலையில் ராதா கர்ப்பம் அடைந்தார். இதனால் அவர் தீபக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் தீபக் கர்ப்பத்தை கலைத்து விட்டு பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் மருத்துவமனைக்கு சென்று கர்ப்பத்தை கலைத்து விட்டார்.

இதனையடுத்து கல்லூரி முடிந்ததும் ராதா தனது காதலன் தீபக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியுள்ளார். ஆனால், தீபக் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, தான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரவேண்டும்; இல்லையென்றால் உன்னுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி ராதாவை மிரட்டினார்.
 
மேலும், காதலியின் ஆபாச படங்களில் சிலவற்றை தனது நண்பர்களின் செல்போன்களுக்கு அவர் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்த ராதா கடந்த 19 ஆம் தேதி கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து ராதாவின் தந்தை கிருஷ்ணாபுரம் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோவைக்கு சென்று அங்கு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர் தீபக்கை காவல்துறையினர் கைது செய்து தர்மபுரிக்கு அழைத்து வந்தனர்.
 
இதையடுத்து அவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது ஆபாச படம் எடுத்து அதை தனது நண்பர்களின் செல்போனுக்கு அனுப்பிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.