வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2016 (11:32 IST)

காதல் மனைவி கடத்தல்: கவுரவ கொலை செய்ய திட்டம்

மனைவியை கவுரவ கொலை செய்ய அவரது பெற்றோர்கள் திட்டமிட்டு இருப்பதாக கணவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.



 

 
 
சென்னை தண்டையார் பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த சதீஷ்குமாருக்கும், நந்தனிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்,  ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மனைவியை அவரது உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாக கணவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த 8 ஆண்டுகளாக நானும், நந்தினி என்ற பெண்ணும் காதலித்து, பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எங்களது காதலுக்கு நந்தினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், எங்களது திருமணத்தை பதிவு செய்ய கடந்த 12ஆம் தேதி அன்று ராயபுரம் திருமண பதிவு அலுவலகத்திற்கு எனது மனைவியுடன் நான் சென்றேன்.
 
அப்போது, எனது மனைவி நந்தினியை அவரது உறவினர்கள் அடித்து உதைத்து வலுக்ககட்டாயமாக கடத்திச் சென்று விட்டனர். தற்போது, அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. மனைவியை கவுரவ கொலை செய்ய அவரது பெற்றோர்கள் திட்டமிட்டு கடத்திச் சென்று இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், என்னை எப்படியாவது மீட்டு செல்லுமாறு அவரது செல்போனில் இருந்து தகவலை அனுப்பி கொண்டு இருக்கிறார். எனது மனைவியை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.