செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2016 (13:17 IST)

காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவர்

காதலித்து வந்த என்ஜினீயரிங் மாணவரும், கல்லூரி மாணவியும், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.


 

 
சிவகங்கையை அடுத்துள்ள பாசாங்கரை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாசானம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
 
இவரது மனைவி லதா. இவர்களது மகன் மகேந்திரன். இவர் பூவந்தி அருகேயுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.
 
மகேந்திரன் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் வீரபாண்டி. இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி.
 
இந்த தம்பதியினரின் மகள் அகிலா. இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் இருவரும் உறவினர்கள்.
 
இந்நிலையில் அகிலாவும், மகேந்திரனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது அவர்களது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, மகேந்திரன் அகிலாவை அழைத்துக் கொண்டு தனது தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்து விஷம் குடித்துள்ளனர்.
 
நீண்டநேரமாகியும் மகேந்திரன், அகிலா இருவரையும் காணவில்லை என்பதால் இருவரையும் அவர்களது பெற்றோர் தேடியுள்ளனர்.
 
இந்நிலையில், இருவரும் தோட்டத்தில் விஷம் குடித்தநிலையில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து கதறி அழுதபடி, இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
 
அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
 
இது குறித்து சிவகங்கை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்கள் குடும்பத்தினரையும், அப்பகுதி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.