வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (18:15 IST)

விசாரணையின் பெயரில் நிகழும் லாக்-அப் மரணங்கள் - ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

காவல்துறையின் லாக்-அப் மரணங்கள் குறித்து முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சமீப காலமாக காவல்துறையின் அத்துமீறல்கள், லாக்கப் மரணங்கள், கௌரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷமீல் அகமது என்பவரை போலீசார் கடந்த 18ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக தெரிகிறது.
 
மறுநாள் விடுவித்து மேல்சிகிக்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், 25ஆம் தேதி சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்படடு 26ஆம் தேதி மாலை அவர் உயிரிழந்திருக்கிறார். இதையொட்டி போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவத்தினால் ஆம்பூர் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
 
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மும்தாஜ் என்ற பெண் படுகொலை செய்யப்பட்டதையொட்டி காவல்துறையினர் டேனியல் என்பவரின் மனைவி எலிசபெத்தை விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து, உதைத்து கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். இதையொட்டி பி.என்.பாளையத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரையும் நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்து சென்று ஒருவார காலம் காவலில் வைத்து அடித்துள்ளனர்.
 
இறக்கும் தருவாயில் ஜூன் 5ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சுப்ரமணி இறந்து விட்டதாக காவல்துறை அவரது மனைவியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். 8 நாட்களாக சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாலே சுப்ரமணி இறந்துள்ளதாகத் தெரிகிறது.
 
மும்தாஜ் படுகொலை செய்யப்பட்டதற்கு உரிய முறையில் விசாரணை நடத்தாமல் சிலரை துன்புறுத்தி சித்ரவதை, லாக்-அப் மரணம் போன்ற கொடுமைகளை காவலர்கள் நிகழ்த்தியுள்ளனர். இதற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெய்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் இயக்கங்களும் போராடி வந்த போதிலும், இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இதேபோன்று சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
இதையொட்டி பல்வேறு அமைப்பினர் மூன்று நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக சாதி மறுப்பு, காதல் பிரச்சனைகளில் சாதிய மேலாதிக்க சக்திகள் கௌரவக் கொலை உள்ளிட்ட கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் காவல்துறை இது குறித்து உரிய முறையில் தலையீடு செய்வதில்லை. அரசு நிர்வாகமும் இதில் அலட்சியம் காட்டுகிற போக்கு நீடிக்கிறது.
 
மதுரையைச் சேர்ந்த அஞ்சுகம் என்ற தலித் பெண்ணை ராமேஸ்வரத்தை சேர்ந்த பிற்படுத்தப்படட வகுப்பைச் சார்ந்த சேதுபாஸ்கர் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி கர்ப்பமடையச் செய்துள்ளார். பிறகு, அஞ்சுகத்தை கைவிட முனைந்த போது, காவல்துறையில் புகார் செய்யப்பட்டு திருமணம் நடந்துள்ளது.
 
சேது பாஸ்கரின் உறவினர்கள் அஞ்சுகத்தை கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். இதையொட்டி காவல் ஆய்வாளரிடம் முறையிட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த தோழர் வடகொரியா மீதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சி.ஆர்.செந்தில்வேல் மீதும் வழக்கு பதிவு செய்து, செந்தில்வேலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
 
சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராகவும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடிக் கொண்டிருக்கும் தலைவர்களையும், இயக்கங்களையும் காவல்துறை பழிவாங்கும் நோக்கோடு அணுகுகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வகையில் நியாயம் கிடைக்க எவ்வித நடவடிக்கையும் காவல்துறை மேற்கொள்வதில்லை என்பது மேற்கண்ட சம்பவங்களால் தெரியவருகிறது.
 
காவல்துறையின் இத்தகைய போக்குகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தொடர்ச்சியாக நடந்து வரும் காவல்துறையின் இத்தகைய போக்குகளையும், அத்துமீறல்களையும், காவல்துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற தமிழக முதலமைச்சர் தலையிட்டு தவறுகள் செய்திருக்கும் காவல்துறையினர் மீது உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.