1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2016 (06:00 IST)

காதலிக்க மறுத்த மாணவியை கழுத்து அறுத்துக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த மாணவியை கழுத்து அறுத்துக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 

 
சேலம், அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிணி. இவர் பி.இ. முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் ஹரிணியின் வீட்டிற்கு வந்தனர்.
 
அந்த நேரத்தில் ஹரிணி பெற்றோர்கள் வெளியே சென்றிருந்தனர். ஹரிணியின் தங்கை தேஜாஸ்ரீ மட்டும் பள்ளி முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்து தனியாக இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்களில் ஒருவர் தேஜாஸ்ரீயை கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றார்.
 
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஹரிணியின் தந்தை துரைராஜ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தேஜாஸ்ரீ கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
 
சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் விறைந்து செயல்பட்ட காவல் துறையினர், 48 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த மின்னா வேட்டுவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் யுகாதித்தியன் (23), அவரது நண்பரான சசிகுமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
 
இந்நிலையில், இது குறித்து யுகாதித்தியன் அளித்துள்ள வாக்குமூலத்தில், தேஜாஸ்ரீயின் அக்காள் ஹரினியுடன் ஒன்றாக படித்ததாகவும் அவரை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்து விட்டதாகவும் கூறினார்.
 
மேலும், ஹரினி செல்போன் எண்ணை மாற்றி விட்டதால் அந்த நம்பரை வாங்க வீட்டுக்கு வந்த போது தேஜாஸ்ரீயிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை கொன்று விட்டதாகவும் அவர் வாக்கு மூலத்தில் கூறி இருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சேசசாயி தீர்ப்பு வழங்கினார். இந்த கொலையில் தொடர்புடைய யுகாதித்தியன், சசிகுமார் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.