1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (18:52 IST)

80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் பிரதமருக்கு நன்றி: எல் முருகன்

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மே மாதம் மற்றும் ஜூன் மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் இந்தியாவில் உள்ள 80 கோடி மக்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசம் என சற்று முன்னர் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்
 
இந்த அறிவிப்புகளை தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
80 கோடி மக்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் இலவசமாக உணவு தானியங்கள். கொரோனா இரண்டாவது அலை மக்களிடம் வேகமாகப் பரவி வருகின்ற காரணத்தினால் 18 வயது நிரம்பியவர்கள் முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடுதல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் தேசிய அளவில் திட்டமிடல் போன்ற பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது
 
இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து வருகின்றன. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளதால், இந்தியா முழுவதும் 80 கோடி பயனாளிகளுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. 
 
மே&ஜூன் மாதங்களில் இவ்வுதவியை மக்கள் பெறமுடியும். உடனடி நிவாரணமாக இந்த உதவியை அறிவித்த மத்திய அரசுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மத்திய மாநில அரசுகள் அறிவிக்கின்ற கொரோனா பாதுகாப்புமுறைகளை பொதுமக்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்