சட்டங்கள் மாறாதவரை கற்பழிப்பு குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்: குஷ்பு ஆவேசம்
சட்டங்கள் மாறாதவரை கற்பழிப்பு குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசியதாவது:
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சக்தி இருக்கிறது. சாதிக்க முடியும். பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். நான் திரைப்படத் துறையில் இருப்பதால் வெளியே தெரிகிறது. இந்த சமூகத்தில் பல பெண்கள் சாதித்து இருக்கிறார்கள். அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.
நாட்டில் ஆணாதிக்கம் அதிகம். ஆனால் பெண்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. இருந்தாலும் பெண்களுக்கு மரியாதை தருவதில்லை. பாதுகாப்பு இல்லை. பெண்கள் சமுதாயத்துக்கு பயந்துதான் வாழ்கிறார்கள். நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயப்படுங்கள். கல்வியில் பெண்களுக்கு முக்கியம் தாருங்கள். வீட்டில் எல்லா பிள்ளைகளையும் படிக்க வையுங்கள். எல்லா வேலைகளையும், ஆண், பெண் பிள்ளையையும் செய்ய வையுங்கள்.
பெண்கள் 6 மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது, இப்படித் தான் டிரஸ் போட வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு உள்ளது. எப்படி கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு தெரியாதா? உங்கள் மனசாட்சிக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள்.
நம் நாட்டில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். சட்டங்கள் மாறாதவரை கற்பழிப்பு குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். பெண்கள் தனக்காக போராடினால்தான் சாதிக்க முடியும். இல்லத்தரசி என்று சொல்வதற்கு வெட்கப்படாதீர்கள். உலகைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் லட்சுமி, துர்க்கா இருக்கிறாள். நிச்சயம் சாதிக்க முடியும் என்று கூறினார்.