1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (09:16 IST)

சிக்கன் கிரேவி, குளிர்பானம் சாப்பிட்ட தாய், மகள் பலி! – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி டிரைவரின் மனைவி கற்பகவல்லி. இவர்களுக்கு சண்முகபாண்டி என்ற மகனும், தர்ஷினி என்ற மகளும் உள்ளனர். நேற்று கற்பகவல்லி அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார். வீட்டில் செய்திருந்த உணவுடன் அதை கலந்து கற்பகவல்லியும், அவரது மகள் தர்ஷினியும் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சில நிமிடங்களில் வயிற்றெரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள கடையில் 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி இருவரும் குடித்துள்ளனர். பின்னர் சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவர்கள் சிக்கன் கிரேவி வாங்கிய கடை, குளிர்பான கடை உள்ளிட்டவற்றில் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், அவற்றை ஆய்வுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.