வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2015 (00:35 IST)

சோழ மண்டல மாநாட்டை கொங்கு மண்டல மாநாடு விஞ்சும்: ராமதாஸ்

ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடுதான் கொங்கு மண்டல பாமக மாநாடு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வர்ணித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பாமக வரலாற்றில் எண்ணற்ற மைல்கற்களை கடந்து வந்துள்ளது. அவற்றின் தொடர்ச்சியாக பாமக அடுத்த மைல்கல்லை வரும் 12 ஆம் தேதி கொங்கு நாட்டின் தலைநகரான கோவையில் கடக்கவிருக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்திற்கு அருகில் நடைபெறவிருக்கும் கொங்கு மண்டல பாமக மாபெரும் அரசியல் மாநாடும், அதில் படைக்கப்படவிருக்கும் வரலாறும் தான் அந்த மைல்கல் என்பதை பாட்டாளிகள் அனைவரும் அறிவார்கள். உங்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையில் கொங்கு மண்டல பாமக அரசியல் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
பிப்ரவரி 15 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற ‘‘2016 ஆட்சி மாற்றத்திற்கான மாபெரும் அரசியல் மாநாட்டில்’’ பாமகவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிவிக்கப்பட்டார். ஆட்சி மாற்றத்தை நோக்கி அப்போது தொடங்கிய பாமகவின் பயணம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
 
முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருத்துவர் அன்புமணி இராமதாசு தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து பங்கேற்ற பொதுக்குழு கூட்டங்கள் நமது வலிமையையும், பத்திரிகையாளர் சந்திப்புகள் சான்றோர் மத்தியில் நமக்கிருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்தின.
 
தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோவில்பட்டி ஆகிய 6 இடங்களில் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு போராட்டங்களில் பங்கேற்ற மகளிர் கூட்டம், வரும் தேர்தலில் ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தின் ஆதரவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் என்பதை உணர்த்துவதாக இருந்தது. இதுவரை அவர் பங்கேற்ற 13 பொதுக்கூட்டங்களுக்கு கிடைத்த ஆதரவு இதை உறுதி செய்திருக்கிறது.
 
தென் மாவட்டங்களில் நடந்த போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன், தென் மாவட்டங்களில் பாமக எங்கே? எனக் கேட்டவர்கள் ஓடி ஒளிந்தனர்.
 
சேலம் மாநாட்டைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் மே 17 ஆம் தேதி நடந்த சோழ மண்டல பாமக அரசியல் மாநாடு நமது வலிமையை இந்த உலகுக்கு எடுத்துக் கூறியது. மாபெரும் கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் கட்சிகளின் மாநில மாநாடுகளை விட நமது மண்டல மாநாடு மிக பிரம்மாண்டமாக நடந்தேறியது. சேலம் மாநாட்டை சோழ மண்டல மாநாடு விஞ்சியது.
 
சோழ மண்டல மாநாட்டை கொங்கு மண்டல மாநாடு விஞ்சும் என்ற அளவுக்கு இந்த மாநாட்டுக்கான திடல் மக்கள் கூட்டத்தால் நிறையும்.... கொங்கு மண்டலத்தில் நமது வலிமை என்ன என்பதை நாட்டுக்கு விளக்கும் வகையில் முரசு அறையும். பாமக வடக்கு மற்றும் வட மேற்கு மாவட்டங்களைத் தாண்டி பாமகவுக்கு செல்வாக்கு இல்லை என்று பிதற்றியவர்களின் குரல் இம்மாநாட்டுடன் மறையும்.
 
கோயம்புத்தூருக்கு தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் தான் ஐரோப்பாவில் நடந்த தொழில் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தது.
 
அதே போல் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு ஆதரவாக நடைபெறவுள்ள மக்கள் புரட்சியில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் முக்கியப்பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இன்னும் 9 மாதங்களில் நடைபெறவுள்ள அந்த ஜனநாயகப் புரட்சிக்கு அடிக்கல் நாட்டுவது தான் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
 
இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளி சொந்தங்களான உங்களின் வருகை தான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். மாநாட்டில் பங்கேற்பதை விட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்ற ஒன்றை மட்டும் தான் சொந்தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்.
 
கொங்கு தலைநகரம் மனிதத் தலைகளாக காட்சியளித்தது. பாமக வெற்றி பெறச் செய்து கோட்டைக்கு அனுப்ப கொங்கு நாட்டு மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அலைகடலாய் திரண்டு வந்து ஆட்சி மாற்றத்திற்கான கொங்கு மண்டல பாமக அரசியல் மாநாட்டை சிறப்பிக்குமாறு பாட்டாளி சொந்தங்களை அழைக்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.