வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (20:06 IST)

மோடி பாஸ் செய்து விட்டார் : மத்திய பட்ஜெட் பற்றி கருணாநிதி கருத்து

2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


 

 
திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
“பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் புதிய வரிச் சலுகைகள் எதுவும் இடம் பெறவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரி செலுத்தும் நடுத்தர வருவாய் பிரிவினர் மற்றும் ஊதியம் பெறுவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
நடப்பு நிதி ஆண்டான 2015-2016 டிசம்பர் மாதம் வரை, மத்திய அரசின் அமைச்சகங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் எந்த அளவுக்கு திட்டச் செலவுகளை மேற்கொண்டிருக்கின்றன என்று பார்த்தால், பத்து அமைச்சகங்கள் பாதி அளவு நிதியைக் கூட செலவு செய்யவில்லை என்பதும்; ஏழு அமைச்சகங்கள் நிதியாண்டின் ஒன்பது மாதங்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாகச் செலவு செய்திருக்கின்றன!
 
2016-2017ஆம் ஆண்டுக்கான இந்த நிதி நிலை அறிக்கை "நான் எழுதும் பரிட்சை" என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார். திரு. ஜெட்லியின் நிதி நிலை அறிக்கை மூலமாக இந்தப் பரிட்சையில் திரு மோடி அவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முழுமையான வெற்றி பெற்றிருக்கிறாரா என்பதை நிதி நிலை அறிக்கை நடைமுறைக்கு வந்து அது ஏற்படுத்தும் மாற்றங்களையும், விளைவுகளையும் பொறுத்தே கூற முடியும். எனினும் பிரதமர் மோடி அவர்கள் பரிட்சையில் பாஸ் செய்திருக்கிறார் என்றே இப்போதுள்ள நிலையில் சொல்லத் தோன்றுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.