1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (09:58 IST)

விஜயகாந்திற்காக கருணாநிதி கலங்கிவிட மாட்டார் : திண்டுக்கல் லியோனி

கூட்டணிக்கு ஒருவர் வரவில்லை என்பதற்காக கலைஞர் கருணாநிதி கலங்கிவிட மாட்டார் என்று மேடைப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
 

 
திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கரூர் வெங்கமேட்டில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி, ’’60 ஆண்டுகளில் சின்னத்தை, கொள்கையினை, கொடியினை திமுக மாற்றவில்லை.
 
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர்., வைகோ வெளியேறியபோது, நெடுஞ்செழியன், எஸ்.டி.எஸ். போன்றவர்கள் துரோகம் செய்த போது கலங்காத திமுக தலைவர் கலைஞர், ஒருவர் [விஜயகாந்த்] கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக கலங்கி விட மாட்டார். 
 
கபடி போட்டியில் 7 பேர் அவுட்டான நிலையில் ஒருவர் களத்தில் நின்று போராடும் போது அந்த 7 பேரின் பலம் அவருக்கு வந்துவிடும். அதே போன்று தனித்து நின்று வெற்றி பெறும் ஆற்றல் திமுகவுக்கு இருக்கிறது. 
 
ஜெயலலிதா எந்த கஷ்டமும் படாமல் அதிமுகவை கைப்பற்றினார்.  ஆனால் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகி புண்பட்டு, பண்பட்டு, இன்று மேம்பட்ட தலைவராக திகழ்கிறார். கலைஞர் ஆசியுடன் தமிழகத்தின் தலைமை பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்பார். மக்களுக்கு பயனளிப்பார்.
 
மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை பார்த்து சிலர் கிளம்பி இருக்கிறார்கள். அவரை போன்று காப்பி அடித்து டீ குடிக்கிறார்கள். நேற்று முளைத்த கட்சி தலைவர்கள் விரைவில் காணாமல் போய் விடுவார்கள்’’ என்று தெரிவித்தார்.