வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 20 அக்டோபர் 2014 (11:41 IST)

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதற்கு வருத்தப்படவில்லை - கருணாநிதி

அதிமுகவின் தலைவிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திரிவித்துள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
18 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களிலும் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு வந்த ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப்போவதாக அறிவித்தார். ஆனாலும் குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களின் பாதுகாப்பு கருதி, தீர்ப்பினை செப்டம்பர் 27 ஆம் தேதிதான் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைத்து, அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 27 ஆம் தேதியன்றே தீர்ப்பினை அளித்தார். 
 
அந்த தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சட்ட விதி முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா 1,136 பக்கங்களில் விரிவான தமது தீர்ப்பில் விளக்கியிருக்கிறார். 
 
இந்த தீர்ப்பு வெளியானவுடன், அதைப்பற்றி நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து தீர்ப்பு முழுவதையும் கவனமாக படித்த பிறகு விளக்கலாம் என்று எண்ணினேன். 
 
மேலும் அதிமுகவின் தலைவிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை. 
 
ஆனால் அதிமுகவினர் சிலர் நான்தான் ஏதோ ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதாக கூறி கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? அன்றைய ஜனதா கட்சித்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தமிழக ஆளுநரிடம் அளித்த புகார் மனுவின் காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு ஆரம்பமானது என்று கருணாநிதி கூறியுள்ளார்.