கரூர் செந்தில் பாலாஜி ஏரியா, அவர் ஊர், அவர் மக்கள்: கமல்ஹாசன் பேட்டி..!
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அரசியல் கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கரூர் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார்.
அப்போது, கரூர் சம்பவம் நடந்த உடனே செந்தில் பாலாஜி மீட்புப் பணியில் ஈடுபட்டது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, "நேரத்திற்கு வந்து மேலும் உயிர் சேதம் ஏற்படாமல் காப்பாற்றிய செந்தில் பாலாஜிக்கு நாம் நன்றிதான் சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கரூர் என்பது அவருடைய ஏரியா, அவருடைய ஊர், அவர் மக்கள். அவர் வராமல் வேறு யார் வருவார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் செயல்பட்ட விதம் தனக்குப் பெருமையாக உள்ளதாகவும் கமல்ஹாசன் கூறினார். "காலம் கடந்த அறிவுரை சொல்வதில் அர்த்தம் இல்லை என்றும், இனிமேல் விஜய் ஒரு தலைவராக செய்ய வேண்டியதைச் சரியாக செய்ய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva