1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2015 (19:07 IST)

’ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது’ - விஜயகாந்த் சூளுரை

விலைவாசியை உயர்த்திய ஜெயலலிதாவை எக்காரணத்தை முன்னிட்டும் மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
தேமுதிக சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மண்ணிப்பள்ளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 
அதன்பின் விஜயகாந்த் பேசும்போது, ''விலைவாசியை குறைப்பேன் என்று கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால் 4½ ஆண்டில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. தங்கம் விலைக்கு நிகராக பருப்பு விலை உயர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் தமிழில் படிக்க சொல்கிறார்கள். ஆனால் தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை.
 
மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஜெயலலிதா கொடநாட்டில் பதுங்கி விட்டார். மக்கள் நலன் குறித்து சட்டமன்றத்தில் பேச எழுந்தால் எங்களை பேச விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் என் மீது வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
 
நான் வரும் வழியெல்லாம் சாலைகள் படுமோசமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதாவை எக்காரணத்தை முன்னிட்டும் மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது" என்றார்.