1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (21:43 IST)

பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஜி.கே.வாசன்

பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, நெல்லையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழகத்தில் விலைவாசி உயர்வு சாதாரண மக்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, பருப்பு விலை உயர்வை மத்திய மாநில அரசுகள்  உடனே கட்டுப்படுத்த வேண்டும். பருப்பை பதுக்கி விற்பனை செய்வர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ஹரியானாவில் தலித் குழந்தைகள் மீதான கொடூர செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கதக்கது.
 
தற்போது நடைபெறும் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அவர்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த அச்சத்தை போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இதை மத்திய அரசு செய்யத்தவறினால் அவர்களை வரலாறு மன்னிக்காது என்றார்.