13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயருகிறதா? விரைவில் அறிவிப்பு என தகவல்...!
தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், தற்போது கட்டணத்தை முறைப்படுத்தி உயர்த்த கோரும் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விரைவில் திருத்தப்பட்ட புதிய ஆட்டோ கட்டணப் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பயணிகள் நல அமைப்பினர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, உதிரிபாகங்களின் விலை மற்றும் தற்போதைய வாழ்க்கைச் செலவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில், குறைந்தபட்சக் கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டர் பயணத்திற்கும் 22 முதல் 25 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தரவுகளை ஆய்வு செய்து வரும் தமிழக அரசு, பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் என இரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நியாயமான புதிய கட்டணத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
