முதல்வர் விஜய்யின் சுதந்திர தின உரையில் விடுபட்ட ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. அமைச்சர் கீர்த்தனா அதிருப்தியா?
நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியேற்றி உரையாற்றினார். தனது 12 நிமிட சுதந்திர தின உரையில், ஊழலற்ற நிர்வாகத்தை நோக்கித் தவெக அரசு பயணிப்பதாக குறிப்பிட்ட அவர், கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டார். விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்பு, பயிர்க்கடன் தள்ளுப்படி, காலை உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் ஆன்லைன் பத்திரப்பதிவு போன்ற முக்கிய அம்சங்கள் அவரது உரையில் இடம்பெற்றன.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு தவெக அரசு பெருமையுடன் விளம்பரப்படுத்திய ரூ.1 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்ட தொழில்துறை சாதனை குறித்து முதல்வர் விஜய் தனது உரையில் எங்குமே குறிப்பிடவில்லை. இது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை மிகுந்த அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தனது துறையின் மிகப்பெரிய சாதனை சுதந்திர தின உரையில் விடுபட்டது தற்செயலாக நடந்ததா அல்லது அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் சதி உள்ளதா என அவர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் கீர்த்தனாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொழில்துறை போன்ற முக்கிய துறையை சரியாகக் கையாள தவறியதாக அவர் மீது அதிருப்தி நிலவி வருவதால், இந்த சம்பவம் அமைச்சக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
