வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 1 நவம்பர் 2015 (23:29 IST)

கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சி: ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சி நடப்பதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும், அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 
தமிழகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக மது உள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்கள் மதுவால் சீரழிந்துள்ளன. இதைத்தான் கோவன் தனது பாடலில் கூறியுள்ளார்.
 
கோவனின் பாடலில் உள்ள சில ரசனைக் குறைவான வார்த்தைகளை ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் மதுவால் தமிழ்நாட்டில் ஏற்படும் சீரழிவுகள் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் பாடல்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் உண்மையானவை. இந்த உண்மையை கூறியதற்காக ஒருவர் மீது தேசத் துரோக வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது.
 
மேலும், கோவனை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். மது விற்பனையையே கடமையாகக் கொண்ட ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.
 
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த அதிமுகவும் மற்றும் திமுகவும் மதுவைக் கொடுத்து மக்களுக்கு செய்த தீமைகள் மன்னிக்க முடியாதவை ஆகும்.
 
டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்பு, கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மதுவைக் கொடுத்து பறித்துள்ளார்கள்.
 
தமிழக அரசே மது விற்கத் தொடங்கியதற்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை சரி செய்வதற்காக மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மக்களால் செலவிடப்பட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 28 லட்சம் பேர் மதுவால் இறந்துள்ளனர்.
 
பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் கைம்பெண்கள் ஆன கொடுமை நிகழ்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிறுவர்களும், பெண்களும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.
 
தமிழகத்தில், மதுவக்கு எதிரான போராட்டங்களையும், போராட்டக்காரர்களையும் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் ஒடுக்கத் தான் முடியுமே தவிர, மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய இயலாது.
 
மேலும், தமிழகத்தில் மதுவை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய யாரால் முடியும் என்பதை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் தங்கள் உணர்வை வாக்குகளாக வெளிப்படுத்துவார்கள் என்று அதில் கூறியுள்ளார்.