1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 3 ஜூன் 2015 (15:59 IST)

ஐஐடி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட விவகாரம்: திருச்சியில் பிரதமர் மோடி படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து திருச்சியில் பிரதமர் மோடியின் உருவபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்து திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள், அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பாக சில வாரங்களுக்கு முன்பாக கருத்தரங்கு நடந்தது. அதில், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசப்பட்டது என்று கூறி ஐஐடி நிர்வாகம், அம்பேத்கர் மற்றும் பெரியார் அமைப்பை தடை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 நாட்களாக பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 
திருச்சியில் ரயில் மறியல், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி உருவப்படம் எரிப்பு என நேற்று போராட்டம் நடக்க, இன்று மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் மத்திய அரசின் நிறுவனமான திருச்சி என்ஐடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியோர் குழந்தைகளுடன் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஐஐடி நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்தும், அம்பேத்கர் மற்றும் பெரியார் வாசகர் வட்டம் தடைசெய்யப்பட்டது, கருத்து சுதத்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது என கோஷம் எழுப்பினர்.
 
இதனையடுத்துக் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அதேபோல், திருச்சி சட்டக் கல்லூரி வளாகம் முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி சட்டக்கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கிளை அமைப்பாளர் சுந்தர் தலைமையில் திருச்சி சட்டக்கல்லூரி வளாகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய மாணவர்கள், பிரதமர் மோடியின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
 
மோடியின் உருவபடத்திற்கு செருப்பு மாலை அணிவித்த விவகாரம் திருச்சியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.