வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 20 ஜூலை 2015 (11:46 IST)

'முதலமைச்சர் உடல்நிலை குறித்து பேசுபவரின் நாக்கை வெட்டுவோம்' - அதிமுக எம்.பி. அதிரடி

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பேசுபவர்களின் நாக்கை வெட்டுவோம் என பொது கூட்டத்தில் நாமக்கல் அதிமுக எம்பி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை [19-07-15] இரவு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே, அதிமுக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்கப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், கலந்து கொண்டார்.
 
அப்போது பேசிய அதிமுக எம்.பி. சுந்தரம், “பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக, முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரினார். அதற்கு ஜெயலிலதா, ஒரு ஷரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருந்தார்.
 
தற்போது ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தால்தான், நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேறும். இல்லாவிட்டால் நிறைவேறாது. தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
 
பாமகவினர் கோவையில் மாநாடு நடத்தி, அன்புமணிதான் அடுத்த முதல்வர் என்கின்றனர். டாஸ்மாக் கடையை மூடுவோம் என அவர்கள் கூறும் நிலையில், மாநாடு நடந்த தினத்தன்று கோவை பகுதியில் ரூ.1 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு ஊழலை பற்றி பேச தகுதியில்லை.
 
முதல்வர் ஜெயலலிதாவை ஓய்வு எடுக்குமாறு கூறுகின்றனர். நாங்கள் மற்றவர்களை ஓய்வு எடுக்க கூறுவதில்லை. இனி ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பேசுபவர்களின் நாக்கை வெட்டுவோம்” என்றார்.