வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (00:51 IST)

நான் முதலமைச்சர் வேட்பாளர் அல்ல: மனம் திறந்த மு.க.ஸ்டாலின்

நான் முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்டதில்லை. அந்த எண்ணத்தோடு இருந்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே திமுகவில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என திமுக பொருாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சமீபத்தில், வெளிவந்த தேர்தல் கணிப்பு பற்றியும், அதன் முடிவுகள் குறித்தும் திமுகவில் நீக்கப்பட்ட மு.க. அழகிரி போன்ற ஒருசிலர் அளித்துள்ள பேட்டி பற்றியும் என்னுடைய கருத்தினை முன்வைக்க விரும்புகிறேன்.
 
திமுக தலைவர் கருணாநிதி தான் ஆறாவது முறையும் தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டுமென்றும், மது விலக்குப் பிரச்சினையிலே கூட, தலைவர் கருணாநிதி தான், வெற்றி பெற்று வந்து முதல் கையெழுத்திடுவார் என்றும் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளேன். தலைவர் கருணாநிதி தான் தமிழகத்தில் அடுத்த முறை முதல்வர் என்று அழுத்தந்திருத்தமாக தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
 
நான் முதலமைச்சர் வேட்பாளர் என்று நான் எப்போதுமே சொல்லிக் கொண்ட தில்லை. அந்த எண்ணத்தோடு இருந்ததும் இல்லை. ஆனால், வேண்டுமென்றே திமுகவில் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என சிலர் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்களின் பேட்டியையோ, கருத்தையோ திமுக தொண்டர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. திமுகவை  வலுப்படுத்த  ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டைக் கடந்த நாற்பதாண்டு காலமாகப் பின்பற்றி வருபவன் நான்.
 
தலைவர் கருணாநிதியால் அப்படித் தான் வளர்க்கப் பட்டேன். அந்தப் பண்பாட்டிலிருந்து மாறி வார்த்தைக்கு வார்த்தை லாவணிக் கச்சேரியில் இறங்குவதற்கு நான் தயாராக இல்லை. தனி நபர்களின் விரக்திப் பேச்சை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கலாம். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை, எனக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.