வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2015 (00:28 IST)

சவாலுக்குகே சவால்? முண்டாசு கட்டும் கருணாநிதி

முதல்வர் ஜெயலலிதா விடுத்த சாவலை எதிர்கொள்ள தான் தயராக உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
நான் தெரிவித்த கருத்துகள் நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்தவை என்று நீதி மன்றம் ஒப்புக் கொள்ளுமேயானால், முதலமைச்சர் ஜெயலலிதா அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்கத் தயாரா?
 
இந்த வழக்கே நீதிபதிகள் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ததன் மூலம் தொடங்கியதாகும். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதி மன்றம், உயர் நீதி மன்ற மதுரைக் கிளையின் பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (‪#‎CISF‬) அல்லது அது போன்ற ஓர் அமைப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதுடன், நீதி மன்றப் பணி சுமுகமாக நடைபெறவும் வழி வகுக்கும் என தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய, மாநில உள்துறைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
15-9-2015 தேதிய “இந்து” பத்திரிகையில் வந்துள்ள செய்தியிலேயே, “Pulling up the State Government and the Police for failing to prevent protesters from entering its premises on Monday, the Madras High Court has called upon the authorities to take immediate steps to declare its premises a “High Security Zone” and provide security cover by the Central Industrial Security Force (CISF)” என்று கூறப்பட்டுள்ளது. இதுவாவது தமிழக அரசுக்கும், அதன் காவல் துறைக்கும் அளித்த சான்றிதழா என்பதை எனக்கு சவால் விடும் முதல் அமைச்சர் விளக்குவாரா?
 
நீதிபதிகள் தெரிவித்த இந்தக் கருத்துகளும் உண்மை இல்லையா? நான் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் அனைத்துமே நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்த கருத்துகள் தான்! இதைக் கூறுவதற்காக நான் இந்த வழக்கில் இணைந்து நீதி மன்றத்தில் மனு செய்ய வேண்டுமென்பது தான் ஜெயலலிதாவின் சவால் என்றால் அதற்கு நான் தயார்! நான் தெரிவித்த கருத்துகள் நீதிபதிகள் கூறியதாக ஏடுகளில் வெளிவந்தவை என்று நீதி மன்றம் ஒப்புக் கொள்ளுமேயானால், முதலமைச்சர் ஜெயலலிதா அதை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்கத் தயாரா? என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.