வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (14:32 IST)

மனைவியை விபச்சாரி ஆக்கிய கணவன் : விவாகரத்து கேட்டதால் ஆத்திரம்

தன்னிடம் விவாகரத்து கேட்ட மனைவியை விபச்சாரி என்று வாட்ஸ்-அப் பில் செய்தி ஆனுப்பியதோடு, அவரை கத்தியாலும் குத்திய கணவரை காவல்துறை தேடி வருகிறது.
 
நத்தம் அருகில் உள்ள மங்களபட்டியை சேர்ந்தவர் துரைராஜ். சலவைத் தொழிலாளி. இவரும் பழனியை சேர்ந்த மஞ்சுளாதேவி (29) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
 
இவர்களுக்கு கிருத்திகா(7) என்ற மகள் உள்ளார். துரைராஜ் பழனியில் விடுதியில் வேலை பார்த்து வந்தார். வேலை செய்த இடத்தில், முறைகேட்டில் ஈடுபட்டதால் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். அதன் பிறகு கோயம்புத்தூரில், ஒரு தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார். துரைராஜிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
 
அதனால், மஞ்சுளாதேவி ஒரு வருடத்திற்கு முன்பு தனது குழந்தையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். அதன் பிறகும் திருந்தாத துரைராஜ், மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், மஞ்சுளா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால் கோபமடைந்த துரைராஜ் தனது மனைவியின் புகைப்படத்துடன் கவர்ச்சி நடிகைகளின் படத்தையும் இணைத்து மஞ்சுளாவின் செல்போன் எண்ணுடன் வாட்ஸ்– அப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டார். 
 
மேலும், பணம் தந்தால் இவருடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் பலரும் மஞ்சுளாவின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளனர். இது தன் கணவனின் செயல்தான் என்பதை கண்டிபிடித்த மஞ்சுளா,  வீட்டிற்கு வந்த துரைராஜிடம் இது பற்றி சண்டை போட்டுள்ளார். இந்த தகராறில் துரைராஜ் கத்தியை எடுத்து மஞ்சுளா தேவியை சரமாரியாக குத்தியுள்ளார்.
 
படுகாயம் அடைந்த மஞ்சுளா, தற்போது பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துரைராஜை தேடி வருகின்றனர்.