பதவியேற்ற உடனே ஆய்வுக்கூட்டம்.. அறநிலையத்துறையில் இனி அதிரடி மாற்றம்?
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள திரு. சீ. ரமேஷ் அவர்கள் இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற முக்கிய பணிகள் குறித்து இந்த ஆய்வின் போது ஆலோசிக்கப்பட்டது. மேலும், பெருந்திட்ட வரைவு பணிகள் மற்றும் கோயில் பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சீ. ரமேஷ், "முதலமைச்சர் விஜய் அவர்கள் உறுதியான, நம்பிக்கையான, தூய்மையான நிர்வாகத்தை வழங்கிட வேண்டும் என உறுதியளித்துள்ளார்; அதனை நாம் முழுமையாக பின்பற்ற வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
உயர் அதிகாரிகள் முதல் கடைசிநிலை ஊழியர்கள் வரை அனைவரும் சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என்றும், எதிர்கால திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Edited by Siva
