செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:50 IST)

ரயில் கொள்ளையர்களுக்கு ரகசியம் தெரிந்தது எப்படி? - தீவிரமாகும் விசாரணை

பணம் எடுத்துச் செல்லும் விஷயம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் நிலையில் கொள்ளையர்களுக்கு பரப்பியது யார் என்று ரயில்வே காவல்துறை விசாரித்து வருகிறது.


 
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சேலத்திலிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் விரைவு ரயில் மூலம் கடந்த 8ஆம் தேதி அனுப்பப்பட்டன. வரும் வழியில் அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
 
இதுகுறித்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கு ரயில் பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த சீலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரயில் பெட்டியின் மேற்கூரை வெல்டிங் கருவி மூலம் உடைக்கப்பட்டிருந்தது.
 
அங்கிருந்த 4 மரப்பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்த 500 ரூபாய் கட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. 5-வது பெட்டியில் ரூ.10, ரூ.20 நோட்டுகள் இருந்ததால் அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.6 கோடி வரை இருக்கும் என ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
கொள்ளை குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொள்ளையர்கள் திட்டம் போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். சாதாரண கொள்ளையர்களால் இதுபோன்று செய்ய முடியாது. பல கொள்ளைகளில் ஈடுபட்டவர்களால் மட்டுமே இப்படி துணிந்து செய்ய முடியும். எனவே, வட மாநில கொள்ளையர்கள் இங்குள்ளவர்களின் துணையுடன் கொள்ளை சம்பவத்தை நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
 
எந்த இடத்தில் வைத்து கொள்ளையர்கள் கட்டு கட்டாக கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மூட்டை கட்டி எப்படி எடுத்துச்சென்றனர்? கொள்ளையில் ஈடுபட்டது எத்தனை பேர்? என்கிற எந்த விவரங்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் ரூ.6 கோடி கொள்ளையில் துப்பு துலங்காமல் மர்மம் நீடிக்கிறது.
 
திட்டம் போட்டு 5 பேர் வரை கூட்டாக சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரயிலில் இவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்லும் போது, அதனை எப்போதும் ரகசியமாகவே வைத்திருப்பது வழக்கமான நடைமுறையாகும்.
 
ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் மட்டுமே இந்த விஷயங்கள் தெரிந்திருக்கும். இந்த ரகசியத்தை கொள்ளையர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு யாரோ கசிய விட்டிருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழக ரயில்வே காவல்துறை ஆலோசனை நடத்தியது. அதற்குப் பிறகு இந்த வழக்கு ரயில்வே பாதுகாப்பு படையிடமிருந்து ரயில் கொள்ளை வழக்கு விசாரணை, தமிழக ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கிப் பணம் கொள்ளை குறித்து சேத்துப்பட்டு பணிமனையில் கியூபிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.