டாஸ்மாக் கடைகளை மூடியதில் எந்த தவறும் இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளது. அரசின் இந்த மக்கள் நல கொள்கை முடிவில் எவ்வித தவறும் இல்லை என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
முன்னதாக, தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களின் பார் குத்தகை காலம் ஜூன் 30 வரை உள்ளதால், அதுவரை கடைகளை மூட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், கடை மூடப்பட்ட நாட்களுக்கான குத்தகை தொகையைத் திரும்பத் தர வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்னிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, மதுக்கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு, கடைகளே இல்லாதபோது பார்களை எப்படி நடத்த முடியும் என்று வாதிட்டார்.
அரசின் வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, மதுக்கடைகளை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது என்று பாராட்டியதோடு, பார்களை மூட தடை விதிக்க மறுத்துவிட்டார். எனினும், மனுதாரர்கள் தங்களின் குத்தகை தொகையை திரும்ப பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம் என்றும், அதிகாரிகள் அதனை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
Edited by Siva
