தங்கத்தில் பசை செய்ய முடியுமா? ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல்..!
தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், நூதன முறையில் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னை வந்த ஒரு பெண் பயணியை சோதனையிட்டபோது, அவர் தங்கத்தை பசை வடிவில் மாற்றி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1.37 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்கப்பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில், மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கத்தை கட்டிகளாகவோ அல்லது நகைகளாகவோ கடத்தினால் பிடிபட்டுவிடும் என்பதால், கடத்தல்காரர்கள் ரசாயனங்களை சேர்த்து பசையாக மாற்றும் புதிய தந்திரத்தை கையாண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு பெண் உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பின்னால் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva