வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 9 டிசம்பர் 2015 (17:15 IST)

எமதர்மராஜா வருவதாக பீதி : வீட்டின் முன்பு விளக்கேற்றிய பெண்கள்

சேலத்தில் நேற்று எமதர்மராஜா வருவதாக நேற்று இரவு வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியதால் பீதி ஏற்பட்டதால், பெண்கள் தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று இரவு சேலத்தில், எமதர்ம ராஜா எல்லோரின் வீட்டிற்கும் வருகிறார் என்ற செய்தி வாட்ஸ்-அப் மூலம் பரவியது. இந்த தகவல் தாதகாப்பட்டி பகுதி மக்களிடம் வேகமாக பரவியது. அதையடுத்து அந்த பகுதி பெண்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
 
அதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி, வாசலில் கோலமிட்டனர். தங்கள் வீட்டில் எத்தனை பேர்கள் உள்ளனரோ, அத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். அந்த பகுதியில் ஏராளமான வீடுகளில் விளக்கு வைக்கப்பட்டிருந்தது.
 
இது பற்றி கருத்து தெரிவித்த ஒரு அந்த பகுதி பெண்மணி  “சேலத்திற்கு எமதர்ம ராஜா வருவதாக தகவல் பரவியது. அவர் வந்தால், குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் என்றும், வீடுகள் முன்பு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை ஏற்றி, மறுநாள் அந்த விளக்குகளை, குப்பை தொட்டியில் போடவேண்டும் என்றும், மேலும், ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என்றும் ஜோதிடர் ஒருவர் தெரிவித்தார். இதனால் பயந்து போன நாங்கள் உடனடியாக வீடுகள் முன்பு அகல் விளக்குகளை ஏற்றினோம். மேலும் எங்கள் உறவினர்களுக்கும் இதுபற்றி தகவல் கொடுத்தோம்” என்று கூறினார்.
 
எமதர்ம ராஜா வருவதாக வெளியான செய்தி அந்த பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.