வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 9 ஜூன் 2014 (15:07 IST)

லண்டனில் சீக்கியர்கள் போராட்டத்தில் காந்தி சிலை உடைப்பு

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்ததை எதிர்த்து, லண்டனில் போராட்டம் நடத்திய சீக்கியர்கள் லெய்சர்ஸ் பகுதியில் உள்ள காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
 
கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகளை வெளியேற்ற ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
 
‘புளுஸ்பின் ஆபரேஷன்’ என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சீக்கியர்களால் கடைபிடிக்கப்பட்டது.
 
இதை ஒட்டி இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் லண்டனில் லெய்சர்ஸ் பகுதியில் உள்ள காந்திசிலை முன்பு திரண்டனர். அங்கு பொற்கோவிலில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
 
‘பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்ததை ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது ஆவேசம் அடைந்த சிலர் அங்கிருந்த காந்தியின் வெண்கல சிலையை உடைத்து சேதப்படுத்தினர்.
 
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே காந்தி சிலையை சேதப்படுத்தியதற்கு லெய்செல்பர் கிழக்கு எம்.பியான கெய்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.