தவெக ஆதரவால் எம்பி ஆகிறார் ப்ரவீன் சக்கரவர்த்தி.. தமிழ்நாட்டுக்காக குரல் கொடுப்பேன் என பதிவு...
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியின் (TVK, INC, VCK, IUML, CPI, CPM) முதல் நாடாளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர், இத்தருணத்தை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுவதாக தனது நெகிழ்ச்சியை ப்ரவீன் சக்கரவர்த்தி வெளிப்படுத்தியுள்ளார்.
புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு உருவான இக்கூட்டணியின் முதல் பிரதிநிதியாகக் களம் இறங்குவது தமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இந்த முக்கிய வாய்ப்பினை வழங்கிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் ஆகிய இருவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இருபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, சமூக நீதிக் கொள்கைகளை முன்னிறுத்தி இத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்ற பிறகு, இந்திய நாடாளுமன்ற அவையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் நலன்களுக்காகவும் மிக துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக தான் ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் நெஞ்சம் நெகிழ உறுதியளித்துள்ளார்.
Edited by Siva
