வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (20:53 IST)

கூட்டத்தில் இறந்த 2 பேருக்கு தேர்தலுக்கு பின் நிதியுதவி - ஜெயலலிதா அறிவிப்பு

பிரச்சார கூட்டத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

 
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
 
பிரசாரக் கூட்டம் கடும் வெயிலில் நடைபெற்றதால், கூட்டத்திற்கு வந்த பெண்கள் பலர் வெயிலில் தாங்க முடியாமலும், கூட்ட நெரிசலாலும் மயக்கம் அடைந்தனர். மேலும், ராதாகிருஷ்ணன் என்பவரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் கருணாகரன் என்பவரும் மரணமடைந்தனர்.
 
இந்நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துல் கலந்து கொண்ட சிதம்பரம் நகர 31-வது வார்டைச் சேர்ந்த எஸ்.கருணாகரன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
 
கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தற்போது தேர்தல் நடத்தை, விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.