வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 22 ஆகஸ்ட் 2015 (23:38 IST)

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்தே ஆக வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, சிவகாசியில் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வியின் தரம் வெகுவாக குறைந்து வருவது வேதனை தருகிறது. கடந்த மாதம் ஐஐடி சார்பில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 451 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். மற்றவர்கள் தனியார் பள்ளியில் படித்தவர்கள்.
 
இதே போன்று, மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். மருத்துவப் படிப்புக்கு 2,800 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
அதில் அரசுப் பள்ளியில் படித்த 100 பேருக்குகூட இடமில்லை என்றால் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் எப்படி முன்வருவார்கள் என்று அரசு யோசிக்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், மதுவிலக்கு குறித்து திமுக அளித்துள்ள வாக்குறுதியினை நம்ப முடியாது. அந்தகட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம் வராது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்.
 
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் சந்திப்பை கிண்டலும் கேலியும் செய்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எந்த நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்ய வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர வேண்டும் என்றார்.