வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (15:09 IST)

காட்டுப் பன்றிகளால் நாசமாகும் விவசாயப் பயிர்கள்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் காட்டுப் பன்றிகள் விவசாயப் பயிர்களை நாசம் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதி விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். தற்போது விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கரும்பு, மஞ்சள், சம்பங்கி, வாழை உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்துள்ளனர். இந்த பயிர்களை காட்டு பன்றிகள் புகுந்து நாசம் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

காட்டுப் பன்றிகள் விவசாய பயிர்களை நாசம் செய்வது மட்டுமின்றி அந்த பன்றிகளை விரட்ட செல்லும் விவசாயிகளை தாக்கி உயிரிழக்க செய்யும் சம்பவங்களும் நடந்துள்ளது.

ஆகஸ்ட்டு 20 ஆம் தேதி(நேற்று) நள்ளிரவு கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுளம் ராசாகவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த சம்பத்குமார் என்ற விவசாயி சம்பங்கி தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப் பன்றி பூத்து குலுங்கும் சம்பங்கி செடிகளின் கிழங்குகளைத் தோண்டி எடுத்து நாசப்படுத்தியது.

இதை விரட்டச் சென்றபோது விவசாயி சம்பத்குமாரை தாக்க வந்துள்ளது. உடனே ஓடிவந்து தீ பந்தம் எடுத்துச் சென்று அந்த காட்டுப் பன்றி கூட்டத்தை சம்பத்குமார் விரட்டியுள்ளார்.

இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ”வனப்பகுதியில் இருந்து காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து கரும்புகாட்டில் தங்கியுள்ளது. பல வருடங்களாக கருப்புகாட்டில் குட்டிபோட்டு குடியிருந்து வருகிறது.

இரவு நேரங்களில் சம்பங்கி, வாழை, குச்சிக்கிழங்கு உள்ளிட்ட வயல்களில் புகுந்து நாசமாக்கி வருகிறது. இந்தக் காட்டுப் பன்றிகளை விரட்ட வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இதனைக் கண்டித்து மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளோம். காட்டு பன்றியால் நாசமாகிய விவசாய பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்“ என்றனர்.