வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (11:31 IST)

கட்சி விதிகளை மீறிய ஓபிஎஸ்?? – உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ்!

EPS OPS
அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.

மேலும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மீறி எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை தீர்மானத்தை கொண்டு வர முயன்றதாக ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டினர்.

அதை தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் “முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிம் நம்பிக்கையை ஓபிஎஸ் இழந்துவிட்டார். கட்சியில் முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உள்ளது. ஆனால் அதை முடக்குவதுபோல உயர்நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.