எதிர்க்கட்சி கூட இல்லை.. இனிமேலும் அமைதியாக இருக்க கூடாது.. யூடியூப் சேனல் தொடங்குவோம்: எடப்பாடி பழனிசாமி
"எதிர்க்கட்சி அந்தஸ்த்தில்கூட இல்லாமல் போய்விட்டோம்; இனியும் அமைதியாக இருந்தால் காணாமல்போய்விடுவோம்" என்பதை உணர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்பொழுது சுதாரித்துக்கொண்டுள்ளார். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இளம்புள்ளிகளுடன் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் அவர் ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில், அதிமுகவின் ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனை எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது. கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகளை முற்றிலும் மறுகட்டமைப்பு செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். கூட்டத்தில் பங்கேற்ற இளம்புள்ளிகளிடம், "எல்லோரும் உடனே யூடியூப் சேனல் தொடங்குங்கள், சமூக வலைதளங்களில் தீவிரமாக பரப்புரை செய்யுங்கள், கட்சியை எப்படியாவது இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி கட்டளையிட்டுள்ளார்.
மேலும், அறிக்கை வெளியிடுவதற்கோ அல்லது வீடியோக்கள் பதிவிடுவதற்கோ தனது அனுமதிக்காக காத்திருக்காமல், களத்தில் இறங்கி பரபரப்பாக செயல்படுமாறு அவர் ஆணையிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, காளியம்மாள், கல்யாணசுந்தரம் போன்ற கட்சியின் முக்கிய பேச்சாளர்களை முன்நிறுத்தி, ஊடகங்களிலும் யூடியூப் தளங்களிலும் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக தாக்கி பேசவும், விவாதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த புதிய டிஜிட்டல் பாய்ச்சல் அதிமுகவை மீட்டெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva
