வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (12:53 IST)

என்ஜினீயரிங் சேர மே 3 ஆம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் - விண்ணப்பிக்க மே 20 ஆம் தேதி கடைசி நாள்

என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் மே 3 ஆம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20 ஆம் தேதி கடைசி நாள்.
தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 620 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2 விதமாக நடைபெற உள்ளது. அதாவது மாணவர் சேர்க்கை இடங்களில் அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
 
ஒவ்வொரு கல்லூரியில் உள்ள இடங்களில் 65 சதவீதத்தை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் (அரசு ஒதுக்கீட்டுக்கு) கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீத இடங்களைத்தான் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு கொடுக்க வேண்டும்.
 
பொதுவான கல்லூரிகள் மீதம் உள்ள 35 சதவீத இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக அழைக்கப்படுகிறது. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளாலாம். அண்ணா பல்கலைக்கழகம் நடத்தம் மாணவர் சேர்க்கைதான் பெரிய அளவிலானதாகும்.

அவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே மாதம் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 59 மையங்களில் கொடுக்கப்படும். விண்ணப்பங்கள் மே மாதம் 20 ஆம் தேதி வரை கொடுக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் மே 20 ஆம் தேதி தான் கடைசி நாள்.
 
இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் 2½ லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து தயாராக வைத்துள்ளது. கலந்தாய்வு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இது நேற்று அதிகாரப்பூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
அண்ணா பல்கலைக்கழகம் 2 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விண்ணப்ப கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் சாதி சான்றிதழ் ஜெராக்ஸ் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 மட்டுமே.
 
என்ஜினீயரிங் விண்ணப்பிக்க உள்ள மாணவ-மாணவிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இப்போதே அதற்கான சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று வைத்துக்கொள்ளலாம். அதுபோல நேட்டிவிட்டி சான்றிதழும் பெற்று வைத்திருத்தல் நல்லது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
 
கடந்த ஆண்டு எந்த கட் ஆப் மதிப்பெண்ணில் எந்த கல்லூரியில் இடம் கிடைத்தது என்ற விவரம் விரைவில் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
 
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம் எப்போது விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவகல்வி இயக்குனரகத்தில் கேட்டதற்கு விரைவில் அதற் கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் தேர்வு முடிவு தெரிந்த பின்னர் தான் அதில் உள்ள மதிப்பெண்ணை வைத்து என்ஜினீயரிங், அல்லது மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.