காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிந்தது.. மக்களவையில் கனிமொழி கேட்கும் மாற்றம்..!
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் தற்போது டெல்லி நாடாளுமன்றம் வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்ததை தொடர்ந்து, திமுக-காங்கிரஸ் இடையிலான பல ஆண்டுகால கூட்டணி அதிகாரப்பூர்வமாக முறிந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, மக்களவையில் திமுக எம்.பி-க்களின் இருக்கைகளை மாற்றி அமைக்கக் கோரி திமுக குழுத் தலைவர் கனிமொழி அவர்கள் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "காங்கிரஸ் உடனான கூட்டணி முறிந்துவிட்டதால், அவையில் காங்கிரஸ் எம்.பி-க்களுக்கு அருகிலேயே அமர்ந்திருப்பது இனி எங்கள் உறுப்பினர்களுக்குப் பொருத்தமாக இருக்காது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றக் கடமைகளைச் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குத் தனியாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசியலில் ஏற்பட்ட கசப்புணர்வு, தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளதை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்தியா கூட்டணியின் தூண்களாக விளங்கிய இவ்விரு கட்சிகளும் இப்போது பிரிந்து நிற்பது, தேசிய அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. கனிமொழியின் இந்த அதிரடி நகர்வு, திமுக இனி தேசிய அளவில் தனது தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறது என்பதையே காட்டுகிறது.
Edited by Siva
